/indian-express-tamil/media/media_files/2025/09/29/karur-tvk-2025-09-29-21-54-56.jpg)
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 41 பேர் பலியான வழக்கில் த.வெ.க மாவட்டச் செயலாளர் கைது
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய், நேற்று முன்தினம் (செப்.27) நாமக்கல் தொடர்ந்து கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கூட்ட நெரிசலுக்கான அனுமதியைக் கேட்டவர் மதியழகன் என்பதால், அவர் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
சம்பவம் நடந்த உடன் மதியழகன் தலைமறைவாகி இருந்தார். தனிப்படை காவலர்கள் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கரூர் புறநகர் பகுதியில் இன்று இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் மற்றும் பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை உள்ளிட்ட பிரிவுகள் இதில் அடங்கும்.
இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணை அதிகாரியாக கரூர் டி.எஸ்.பி. செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது, புதிய விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி. பிரேமானந்தனை நியமித்து பொறுப்பு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்காக த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்குச் சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. பொதுச்செயலாளர் ஆனந்தின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய குற்றத்திற்காக மேலும் 3 நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். பெரும்பாக்கம் பா.ஜ.கவைச் சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சிவனேசன், ஆவடி த.வெ.க நிர்வாகி சரத்குமார் ஆகிய மூவரை கைது செய்து, கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மொத்தமாக, கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டது, இந்த வழக்கின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.