கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையமான எம்.ஜி.ஆருக்கு பிறந்தநாள் வணக்கம் என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தநிலையில், எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் அவருக்கு வணக்கம் செலுத்துவதாக த.வெ.க தலைவர் விஜய், கட்சியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, விஜய் வெளியிட்டுள்ள பதிவில், ”அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்,” என்று பதிவிட்டுள்ளார்.