/indian-express-tamil/media/media_files/2025/08/20/whatsapp-image-2025-2025-08-20-17-42-32.jpeg)
TVK Madurai Conference
மதுரை மாநகரில் நாளை (வியாழக்கிழமை) தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே முழு வீச்சில் நடந்து வருகின்றன. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து மாநாட்டு திடலை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (புதன்கிழமை) காலை, மாநாட்டு திடலில் பெரிய கிரேன் இயந்திரம் உதவியுடன் 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவும் பணி நடைபெற்றது. திடீரென கிரேன் இயந்திரத்தின் பெல்ட் அறுந்து, அதன் கட்டுப்பாட்டை இழந்த கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, கொடிக்கம்பம் விழும் திசையில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், அந்த கம்பம் அருகிலிருந்த ஒரு கார் மீது விழுந்து, காரை சுக்குநூறாக நொறுக்கியது.
இந்த விபத்தால் மாநாட்டு திடலில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. எனினும், உடனடியாக சுதாரித்துக்கொண்ட த.வெ.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், சேதமடைந்த கார் மற்றும் கொடிக்கம்பத்தை அகற்றி, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. சேதமடைந்த காருக்குப் பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தமிழக வெற்றிக் கழகம் உறுதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து நடந்த போதிலும், மாநாட்டுக்கான மற்ற ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
நாளை நடைபெறவுள்ள மாநாடு திட்டமிட்டபடி பிரம்மாண்டமாக நடைபெறும் என நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.