திருவள்ளூர் நகரில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் இதனை சரிசெய்வதற்காக சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், கடைகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 ஜே.சி.பி. வாகனங்களுடன் அதிகாரிகள் வந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி, பத்தியால்பேட்டை என்ற இடத்தில் ஆக்கிரமித்து தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞரணி சார்பில் கட்டப்பட்ட அலுவலகத்தை நெடுஞ்சாலைத்துறை இடித்து அகற்றியது.
இந்த அலுவலகம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று இடிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 17க்கும் மேற்பட்ட கட்டடங்களை இடித்து அகற்றினர். இதில் வீடுகள், கடைகள் மற்றும் த.வெ.க அலுவலகங்களும் அடங்கியிருந்தன.