/indian-express-tamil/media/media_files/2025/01/26/FZGCBXtTj7AfuPODAZQE.jpg)
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சார்பாக விடுக்கப்பட்டிருந்த தேநீர் விருந்துக்கான அழைப்பை நிராகரித்த தமிழக வெற்றிக் கழகம், அதில் பங்கேற்கபோவதில்லை என தெரிவித்துள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களின் போது ராஜ் பவனில் ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கமாகும். இந்த விருந்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதனடிப்படையில், இன்று (ஜன 26) குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆளுநர் ஆர்.என். ரவி மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் தேநீர் விருந்தை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க ஆகியோர் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் ஆளுநர் விருந்தில் யாரும் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகமும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. இக்கட்சி தொடங்கப்பட்ட பின்னர் முதன்முறையாக நடைபெறும் ஆளுநர் தேநீர் விருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை போல த.வெ.க-வும் இதனை புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, த.வெ.க தலைவர் விஜய், ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.