/indian-express-tamil/media/media_files/2025/01/20/LgobaifPv5G7Z6p6sQmM.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடைபெற உள்ள நிலையில், தனது கட்சியின் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கை, குறிப்பாக வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அவரது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதோடு, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியை நிராகரிப்பதற்கான மறைமுகச் செய்தியையும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
விஜய் தனது அறிக்கையில், "நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள்" என்று உறுதியளித்துள்ளார். இந்த இரண்டு எதிரிகளையும் சமரசம் இல்லாமல் எதிர்த்து நின்று வெற்றி பெற வேண்டும் என்று விஜய் வெளிப்படையாகக் கூறியிருப்பது, எதிர்காலத்தில் அ.தி.மு.க-வுடன் எந்தவிதமான தேர்தல் கூட்டணியும் வைக்கப்படாது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
விஜய் அறிக்கையின் முழு விவரம் இங்கே
’என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்... இடையில் எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால் கடந்து வந்துகிட்டே இருக்கோம்... வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்... இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்...
முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில், நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு... அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி... மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.
மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்’, என்று அதில் கூறியுள்ளார்.
மாநாட்டு ஏற்பாடுகள்
மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. தொண்டர்களுடன் நெருக்கமாக உரையாடுவதற்கு வசதியாக, 800 அடி நீளத்திற்கு நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது. மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் விஜய் என்னென்ன முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதை அறிய கட்சித் தொண்டர்களும், அரசியல் ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.