தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.
மாநாட்டுக்கான பூமிபூஜை இன்று (புதன்கிழமை) அதிகாலை நடைபெற்றது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பூமி பூஜையில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 25-ல் மதுரையில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
அண்மையில் சென்னை பனையூரில் தவெக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் விஜய் தனது கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.