திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்நிலையில், இந்த சம்பவம் நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஃபீஞ்சல் புயலாக உருவெடுத்தால், தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆறு, ஏரிகள், குளம் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடுமையான மழை பாதிப்பை கண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலை அடிவராத்தில் இருக்கும் வஉசி நகர் 9-வது தெருவில் உள்ள குடியிருப்பபுகள் இந்த மண் சரிவில் சிக்கியுள்ளன. இந்த மண்சரிவில் சிக்கி ஒருவர் தனது வீட்டுடன் புதைந்த நிலையில், 2 குடும்பத்தினர் எச்சரிக்கையாக வெளியில் வந்ததால், மண் சரிவில் சிக்காமல் தப்பித்துள்ளனர்.
தற்போது மீட்பு படையினர் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மீனா (27), அவரது மகன் கௌதம் (8), மகள் இனியா (5), இவர்களின் பக்கத்து வீட்டிலிருந்து இங்கு விளையாட வந்த ரம்யா (7), வினோதினி (14), மகா (7) என இதுவரை இந்த மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியானதாக அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மண்சரிவு சம்பவம் ஏற்பட்ட இடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
மேலும் இந்த மண் சரிவு சம்பவத்தில் உயிரிழந்த 7 பேரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் ரூ5 லட்சம் நிதியுதவி வழங்க அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாளைக்குள் அந்த நிவாரண தொகையை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருவண்ணாமலை மண் சரிவு சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய், திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
— TVK Vijay (@tvkvijayhq) December 2, 2024
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா…
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.