/indian-express-tamil/media/media_files/2024/12/23/Cn3S7r6yCr01Yn5MA8PK.jpg)
பிரியதர்ஷினி ஜெயபால் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மகளிரணி நிர்வாகிகள், அப்பகுதியில் ஏற்றப்பட்டிருந்த த.வெ.க. கட்சி கொடியினை இறக்கி கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என குற்றம்சாட்டி அரியலூரில் த.வெ.க. மகளிர் அணியினர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடியில் வசித்து வரும் பிரியதர்ஷினி ஜெயபால் த.வெ.க.வில் அரியலூர் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக இருந்து வந்தார். இந்நிலையில், அரியலூர் மாவட்ட த.வெ.க நிகழ்ச்சியில் பிரியதர்ஷினி ஜெயபால் உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது மாவட்ட நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த பிரியதர்ஷினி ஜெயபால் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மகளிரணி நிர்வாகிகள், அப்பகுதியில் ஏற்றப்பட்டிருந்த த.வெ.க. கட்சி கொடியினை இறக்கி கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர்.
அப்போது அங்கே வந்த த.வெ.க. நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர் ஏற்றிய கொடியை எப்படி இறக்கலாம் என்று கேட்டதால் வாக்குவாதம் எழுந்தது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரியதர்ஷினி ஜெயபால், “த.வெ.க. சார்பில் பல ஊர்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்து செயல்பட்டிருக்கிறேன். நான் கஷ்டப்பட்டுதான் அனைத்தையும் செய்தேன். ஆனால், எனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை. மகளிருக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியிருக்கிறார். ஆனால். கட்சி நிர்வாகிகள், அவர்களே அனைத்தையும் செய்ததுபோல் காட்டிக் கொண்டார்கள். நான் செய்ததை வெளியில் காண்பிக்கவே இல்லை. மகளிருக்கு கட்சி நிர்வாகிகள் முக்கியத்துவம் அளிக்கவில்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us