கஜ புயல், நவம்பர் 15-ம் தேதி நள்ளிரவு தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிவிட்டது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்கள் கஜ புயலால் பெரும் சேதத்திற்கு உள்ளாகின.
தமிழக அரசு சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிட்டது.
பெரும்பாலான மீட்புப் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், சில இடங்களில் மின் சீரமைப்புப் பணிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மின் ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் உழைத்து வருகின்றனர்.
அவர்களின் உன்னதமான உழைப்பை பொது மக்கள் சிலரே, புகைப்படம் எடுத்து சமூக தளங்களில் பதிவிட்டு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், மின் ஊழியர்களின் உழைப்பை கௌரவிக்கும் பொருட்டு, வேதாரண்யத்தில் உள்ள இரண்டு முடி திருத்தும் தொழிலாளிகள், மின் ஊழியர்களுக்கு முடி திருத்தம் செய்ய கட்டணம் இலவசம் என்று அறிவித்துள்ளனர்.
கே தேவதாஸ் மற்றும் ஏவி அருள் ஆகிய இருவரும், இந்த அறிக்கை பலகையை வைத்து மின் ஊழியர்களுக்கு மட்டும் இலவமாக முடி திருத்தம் செய்து வருகின்றனர். இதுவரை, 50க்கும் மேற்பட்டோர் இதனால் பயனடைந்துள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆபத்தான நிலையில் மின் இணைப்புகளை சரி செய்து வரும் ஊழியர்களுக்கு, தங்களால் முடிந்த நன்றிக்கடன் செலுத்த, இவ்விருவரும் அறிவித்திருக்கும் சலுகை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.