எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய விவகாரத்தில் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரட்டை இலை சின்னம், கட்சி கொடியை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்ட நிலையில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திலும் உரிமை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கியதில் நீதிமன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்றும் தான் வழங்கிய மனுக்களை பரிசீலனை செய்யாமலேயே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது என்று புகழேந்தி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவிற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக புகழேந்திக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி, அவரை வரும் 24 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துள்ளோம் எனவும், அவரது கோரிக்கை மனுவும் அன்றைய தினம் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதே சமயம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த பிறகே தேர்தல் ஆணையம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக புகழேந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ், ‛‛இரட்டை இலை சின்னம் தொடர்பான மனுக்களை விசாரித்து விரைந்து தீர்வு காண வேண்டும்'' என்று உத்தரவிட்டார். அதேவேளையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எந்த காலக்கெடுவையும் விதிக்க முடியாது'' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“