தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கைப்பற்றப்பட்ட அனைத்து சிலைகளும் தொன்மை வாய்ந்த நூற்றாண்டு சிலைகள் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.
தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் நடந்த சோதனை:
தமிழகத்தில் இருக்கும் பிரசித்துப் பெற்ற கோயில்களில் வரலாற்று மிக்க ஐம்பொன் சிலைகள் காணாமல் போனதாக வெளியான குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிலைக் கடத்தல் பிரிவு போலீசார் திவீர வேட்டையில் இறங்கினார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிலைக்கடத்தல் குறித்த ஆய்வு மேற்கொண்டார். கடந்த 3 மாதத்தில் மட்டும் தமிழக கோயில்களில் இருந்து காணாமல் போன சிலைகள் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி சைதாப்பேட்டையிலுள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து நூற்றாண்டுகளை கடந்த, தொன்மையான சிலைகள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து 2 நாட்கள் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 5 ஐம்பொன் சிலைகள், 12 உலோகச் சிலைகள், 22 கல்தூண்கள் என மொத்தம் 89 சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் கும்பகோணம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மீதமுள்ள சிலைகளை ரன்வீர் ஷா வீட்டில் வைத்தே போலீசார் பாதுகாத்து வருகின்றனர். வீட்டில் 21 தூண்களும், 7 பெரிய சிலைகளும் உள்ளதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டின் ஒரு பகுதியை இடிக்க திட்டம் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 2 நாட்கள் சோதனைக் குறித்த முழு விபரத்தை வெளியிட்டார்.
அவர் பேசியதாவது, “ இது முழுக்க முழுக்க கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள். ஒரு கோவிலையே காலி செய்து வீட்டில் வைத்து இருக்கிறார்கள். பழமையான தூண்களை பெயர்த்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிலைகளும் தூண்களும் வெளியே எடுப்பதில் சிரமம் உள்ளதால், வீட்டின் ஒரு பகுதியை இடிக்க ஆலோசித்து வருகிறோம். ஒவ்வொரு சிலைக்கும் மிகப்பெரிய பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது.
சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால், நிச்சயம் தொழிலதிபர் ரன்வீர்ஷா கைதுசெய்யப்படுவார்'' என்று கூறினார்.