திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் அருண் ஜோன்ஸ் ஆகிய இருவரும் நண்பர்கள். இந்நிலையில், அருண் ஜோன்ஸும் அவரது மற்றொரு நண்பரான நந்தா ஹரிஷ் என்பவரும் ராஜசேகர் வைத்திருக்கும் காரை மாத வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இந்தக் காருக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே வாடகை கொடுத்த நிலையில், அதனை வேறு ஒரு நபரிடம் அடமானம் வைத்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய ராஜசேகருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில், ராஜசேகர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அருண் ஜோன்ஸ் மற்றும் நந்தா ஹரிஷ் இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இவ்வாறு காரை வாடகைக்கு எடுத்து அடமானம் வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்