சென்னையில், இரண்டு புறநகர் ரயில்கள் ஒரே நேரத்தில் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போன்று பெருநகரங்களில் மக்கள் பெரும்பாலும் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, புறநகர் ரயில்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த சூழலில் சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் இன்று (மே 21) அரங்கேறிய நிகழ்வு ரயில் பயணிகள் இடையே அச்சத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி புறநகர் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த ரயிலின் ஆறாவது பெட்டியில் திடீரென புகை வந்ததால், பல்லாவரம் ரயில் நிலையத்திலேயே அந்த ரயிலை நிறுத்தினர். இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மற்றொரு ரயிலும், இதே தண்டவாளத்தில் வந்து நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் மட்டுமின்றி ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த ரயில் பெட்டியில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது. எனினும், இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.