கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு பொதுமக்களை துன்புறுத்துவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் சட்ட முன்வடிவு ஒன்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
பொருளாதாரத்தில் நலிவடைந்தோர், விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் போன்றோர் கடன் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான கடன்களால் கடன் சுமையில் சிக்குகின்றனர். கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வசூலிக்க முறையற்ற வழிகளைப் பின்பற்றுகின்றன. இது கடன் பெற்றவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நிலைக்கு கொண்டு செல்கிறது.
இது போன்ற எண்ணங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.
வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம் . கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது.
கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இச்சட்டமுன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஜாமினில் வெளிவரமுடியாது, என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட முன்வடிவுக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் சில திருத்தங்களைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக வழங்குமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டார்.