நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தூள், கில்லி , சண்டைக்கோழி 2 மற்றும் சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி மற்றும் தி லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு, மாரடைப்பில் மரணமடந்தார். இந்நிலையில் இவரது மறைவுக்கு தமிழிசை, முதல்வர் ஸ்டாலின், டிடிவி தினகரன் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இவருடன் இணைந்து பணியாற்றிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “அண்ணன் மயில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர். ரசிகர்களின் அன்பைப்பெற்ற அண்ணன் அவர்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக நடிகர் விஜயகாந்த் ட்வீட் செய்துள்ளார். “பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். சின்னக்கவுண்டர், தவசி உள்ளிட்ட படங்களில் என்னுடன் நடித்துள்ளார். நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். நடிகர் மயில்சாமி சிறந்த மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டும் கூட. ஏராளமான மேடைகளில் தனது மிமிக்கிரிகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.நடிகராக மட்டுமின்றி நெருங்கிய குடும்ப நண்பராகவும் திகழ்ந்தவர். என் மீது அதிகம் பாசம் கொண்டவர்.
பழகுவதற்கு இனிமையானவர்,அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர். இறைவன் சிவன் மீது அதிக பற்று கொண்ட மயில்சாமி சிவராத்திரி அன்று உயிரிழந்துள்ளார். அவரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாது இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும், திரை உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.