பெரம்பலூரில் பல்வேறு அரசு கட்டடங்களை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மற்றும் தி.மு.க இளைஞர் அணி பொறுப்பாளர்கள் நேர்காணல் தொடர்பாக மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
Advertisment
அந்த வகையில் நேற்று திருச்சி வந்த உதயநிதி ஸ்டாலின் திருச்சி பொறுப்பாளர்களிடம் நேர்காணல் நடத்தினார். பின்னர் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.,வினரிடம் நேர்காணல் நடத்தினார்.
பிறகு, பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குன்னம் பேருந்து நிறுத்த புதிய கட்டடம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் ஆகியவற்றையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரம்பலூர் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கக்கூடிய தங்கள் மாவட்டத்திற்கு என ஒரு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி விரைவில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி, கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil