ஒட்டு மொத்த இந்தியாவையும் இந்தி ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது என மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தி தினமான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”பல்வேறு மொழிகளின் நாடாக இந்தியா விளங்குகிறது. அத்தகைய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒன்றிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழி. இந்தியாவின் பல்வேறு மொழிகளையும், பல உலக மொழிகளையும் கௌரவித்திருக்கும் இந்தி, அந்த மொழிகளின் சொற்களஞ்சியம், இலக்கண விதிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தி, எந்த மொழியுடனும் போட்டிப் போட்டதில்லை, எதிர்காலத்தில் போட்டியும் போடாது. அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமே வலுவான நாடு உருவாகும். இதில், அனைத்து மொழிகளையும் மேம்படுத்துவதில் இந்தி ஒரு பாலமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும், இந்த ஆண்டு புனேவில் `அகில இந்திய இந்தி மாநாடு' நடைபெறும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின், "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து.
தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?
நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“