இந்து மதத்தின் போதனைகளான சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றும் சனாதன தர்மம் மலேரியா, டெங்கு, கரோனா போன்றது என்றும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துகளுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உதயநிதி சனிக்கிழமை சென்னையில், “சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்கப்பட வேண்டும். டெங்கு, கொசு, மலேரியா, கரோனா போன்றவற்றை நாம் எதிர்க்க முடியாது, அவற்றை ஒழிக்க வேண்டும். அதேபோல், சனாதனத்தை (சனாதன தர்மத்தை) எதிர்ப்பதை விட, அதை ஒழிக்க வேண்டும்” என்றார்.
இதற்குப் பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை, “கோபாலபுரத்தின் ஒரே நோக்கம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியை தாண்டி சொத்துக்களை குவிப்பதுதான்” எனக் கூறினார். மேலும் இந்தச் சிந்தனை உங்கள் தந்தை மற்றும் உங்களுக்கு மிஷனரிகளிடம் இருந்து வந்ததுதான்” என்றார்.
மேலும், அண்ணாமலை பேசுகையில், “தமிழ்நாடு ஆன்மிக பூமி. இதுபோன்ற ஒரு நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதே உங்களால் செய்யக்கூடிய சிறந்த செயல்” என்றார்.
இதேபோன்று, பாஜக ஐடி செல் தலைவர் அமித் மாளவியா, “சனாதன தர்மத்தை பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய” உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்றார்.
உதயநிதியின் சம்பந்தப்பட்ட காணொலியை பகிர்ந்த அமித் மாளவியா, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக அரசில் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்குவுடன் இணைத்துள்ளார்.
அதை ஒழிக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உதயநிதியை ஆதரித்து, திமுக இணைச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான சரவணன் அண்ணாதுரை, “எங்கள் தலைவர் உதயநிதியின் அறிக்கையை திரித்து, இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக ட்வீட் போட்டுள்ளார்” என அமித் மாளவியா மீது குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில் அமித் மாளவியா கருத்துக்கு பதிலளித்த உதயநிதி, “சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்ய நான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும்” என்றார்.
மேலும், “எனது உரையின் முக்கிய அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்: கொசுக்களால் கோவிட்-19, டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவுவது போல், பல சமூக தீமைகளுக்கு சனாதன தர்மமே காரணம் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
இதற்கிடையில், காங்கிரஸ் எம்பி கார்த்தி ப சிதம்பரம், “யாருக்கும் எதிராக இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“