/indian-express-tamil/media/media_files/2025/07/14/udhayanithi-2025-07-14-17-28-58.jpg)
திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏவும் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினருமான கே. என் சேகரன் மகன் எஸ். சிவக்குமார் திமுக திருவெறும்பூர் பகுதி செயலாளராகவும் 40 வார்டு மாமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
இவருக்கு இன்று காலை துணை முதல்வர் உதயநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் கூத்தப்பார் பகுதியைச் சேர்ந்த கே.என் சேகரன் தற்பொழுது தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
இவரது துணைவியார் எஸ்.சித்ரா என்கின்ற நவமணி. இவர்களது மகன் எஸ்.சிவக்குமார் திருவெறும்பூர் தி.மு.க பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி 40 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
டி.சி.இ , எம் பி ஏ படித்த இவருக்கும் கூத்தப்பார் நகர் தாஸ் மஹால் உரிமையாளர் எஸ். சுப்புதாஸ் பி மங்கையர்க்கரசி ஆகியோரின் மகள் டாக்டர் எஸ்.பவதாரணி ஆகிய இருவருக்கும் இன்று நடந்த திருமணவிழாவிற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது பேசிய அவர், திருச்சி நம் இயக்கத்திற்கு பெரும் முக்கிய பங்கு வைக்கிறது. திருச்சி என்றால் திருப்புமுனை, இந்த பகுதியில் நேரு நடத்தும் மாநாடுபோல் அரங்கம் உள்ளது. அதேபோல் திருச்சியில் இருந்து தான் முதன்மை செயலாளர் நேரு, எம்.பி சிவா தற்போது நண்பர் மகேஷ் ஆகியோர் கிடைத்துள்ளனர்.
திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன், தலைமையும், தலைவரும் என்ன சொல்கிறார்களோ அவர்கள் சொல்வதை தட்டாமல்செயல்படுத்துவதோடு, கட்சிக்காக கடுமையாக உழைத்து தான் இன்று செயற்குழு உறுப்பினராக வளர்ந்துள்ளார். கட்சி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது இந்தப் பகுதியில் கட்சியை கட்டுக்கோப்புடன் கட்டிக் காத்த பெருமை சேகரனையே சேரும் என்றார்.
நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 5000 வீடுகளில் வீட்டுமனை பட்டா கிடைக்காமல் 30 ஆண்டுகால போராட்டத்தை கலைஞரிடம் கூறி தீர்த்து வைத்தவர் கே என் சேகரன்.
காவிரிகூட்டு குடிநீர் திட்டம் பட்டிதொட்டி எல்லாம் சென்று சேருவதற்கு காரணமானவர், ஐடி பார்க்கை கொண்டு வந்தவர், 2016 ஆம் ஆண்டு இந்த தொகுதியில் நண்பர் மகேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது, தலைவர் முதலில் அழைத்தது சேகரனை தான், உன்னிடத்தில் மகேஷை ஒப்படைக்கிறேன், அவர் வெற்றி பெற கடுமையாக பணியாற்ற வேண்டும் என கட்டளையிட்டார்.
அதன்படி, நண்பன் மகேஷை வெற்றி பெற வைத்து அமைச்சராக அழகு பார்ப்பதற்கு முழு காரணம் சேகரன். கே என் சேகரன் வழியில் அவரது மகன் கட்சிப் பணி மற்றும் மக்கள் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சிவகுமார் அப்பா அம்மா சொல்வதைக் கேட்கவில்லை மணமகளுக்கு இரண்டு முடிச்சு தான் போட வேண்டும் என தாய் கூரியதை கேட்காமல் மூன்று முடிச்சை போட்டு உள்ளார்.
காரணம் மனைவி ஏற்கனவே மூன்று முடிச்சியையும் நீங்கள் தான் போட வேண்டும் என கட்டளை இட்டுள்ளார். சிவக்குமார், மனைவி சொல்லை மட்டும் கேட்காமல் தாய் தந்தை சொல்வதையும் கேளுங்கள் அப்பா சொல்வதை நானும் கேட்க மாட்டேன் அதுபோல் தான் நீயும். அரசியலில் தந்தை - மகன் உறவு மிகவும் முக்கியமானது.
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக, மகளிருக்கான அரசாக, மாணவர்களுக்கான அரசாக உள்ளது.
இந்த அரசு மகளிருக்கான அரசாக செயல்படுகிறது, முதல் கையெழுத்தாக விடியல் பயணத்திற்கு கையெழுத்திட்டது, புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு 22 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.
அதில் விடுபட்ட தகுதியானவர்கள் நாளை நடைபெறும் முகாமில் விண்ணப்பித்து பயனடையலாம். இன்னும் 8 மாதம் தான் தேர்தலுக்கு உள்ளது. ஓரணியில் தமிழகம் என்ற முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரண்டாவது முறையாக தமிழக முதல்வரை மீண்டும் முதல்வராக அமர்த்த வேண்டும் அதற்கு கட்சியினர் இந்த 8 மாதத்தில் அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இன்று திருமண விழா காணும் சகோதரர் சிவகுமார் பவதாரணியும் விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டு கொடுக்க வேண்டும், பிடிவாதம் பிடிக்க வேண்டிய இடத்தில் பிடிவாதம் பிடிக்க வேண்டும், உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதற்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.