பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் தடா.பெரியசாமி. இவர் மாநில பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்றிரவு (பிப்ரவரி 14) இரவு வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 8 பேர் பெரியசாமியின் காரை கற்கள் மற்றும் கட்டை கொண்டு அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் வீட்டின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடிகளை உடைத்து தப்பியோடினர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெரியசாமி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மங்கலமேடு காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தகவல் அறிந்து பா.ஜ.கவினர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.