மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னைக்கு வருகை தருகிறார். பாஜக கட்சியின் கூட்டணியில் உள்ள தலைவர்களான பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது.
தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் ஜூன் 8-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அமித் ஷாவின் பயண தேதி மாற்றப்பட்டு, அவர் நாளை (ஜூன் 11) தமிழகம் வருவதாக இருந்தது.
தற்போது, மீண்டும் தேதி மாற்றப்பட்டு, அவர் இன்று (ஜூன் 10) இரவே சென்னைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று இரவு 9 மணி அளவில் சென்னை வரும் அமித் ஷா, எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
அங்கு கூட்டணி கட்சித் தலைவர்களான பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சென்னை கோவிலம்பாக்கத்தில் நாளை காலை 11 மணி அளவில் பாஜக நிர்வாகிகள், பொறுப்பாளர்களை சந்தித்து அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil