சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.
அதில், “இது அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் மட்டுமல்ல, மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக இருந்த அஜித்குமாரை, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற காவல்துறையினர், வழியிலேயே கடுமையாக தாக்கியதாக அவரது சகோதரர் கூறியுள்ளார். இதற்கு முன் பாலியல் புகார் அளித்த பெண்களையும் தாக்கியதாகவும் புகார்கள் இருந்துள்ளன. காவல்துறையினர் எந்த மனநிலையில் செயல்படுகிறார்கள் என்பதை அரசு விளக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “போலி வாக்குறுதிகளும் பொய் புரட்டுகளும் நிரம்பிய போலி திராவிட மாடல் ஆட்சியில், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தங்களுக்குள்ள அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களை துன்புறுத்துவது மிகுந்த அவலமானது. பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறியுள்ளது என்பதற்கே இந்த மரணம் ஒரு சாட்சியாகும்” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“அப்பாவி அஜித்குமார் மரணத்திற்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடி கோரிக்கையும் விடுத்துள்ளார்.