Advertisment

அறியப்படாத ஹீரோக்கள்: மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் மூழ்கிய சென்னை... பல உயிர்களைக் காப்பாற்றிய படகோட்டிகள்

சென்னைவாசிகள் உதவியை நாடியதால் மெய்யூர், பனையூர், காசிமேடு மீனவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
unsung heros

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சென்னை நகர எல்லைக்குள் 6,000 பேர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர், 8 பேர் உயிரிழந்தனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

மிக்ஜாம் புயல் சென்னையைத் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சென்னை முழுவதும் வசிப்பவர்கள் மெதுவாக மீண்டு வருகின்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Unsung heroes: Boatmen who saved lives after Cyclone Michaung flooded Chennai

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சென்னை நகர எல்லைக்குள் 6,000 பேர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர், 8 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் பரவலாக மின்சாரம் தடைப்பட்டு, தொலைத்தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டது, தொலைபேசி சேவைகள், செல்போன் நெட்வொர்க்குகள், இணையம் உள்ளிட்ட அத்தியாவசிய தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் நிறுத்தப்பட்டன.

சில பகுதிகளில் 6 அடி வரை தண்ணீர் தேங்கி நின்றதால், சுமார் ஐந்து நாட்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்), மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.டி), தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணியாளர்கள், மாநில காவல் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் மீட்புப் பணிகளைத் தொடங்கியது. அதே நேரத்தில், மற்றொரு குழு வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்பாளர்களுக்குத் அவர்களின் வழியில் உதவினார்கள்.

படகை எடுத்துச் சென்ற மீனவர்கள்

அரசு மீட்புப் பணியாளர்களுடன், மீனவர் சமூகமும் சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவியது.

மெய்யூர், பனையூர், காசிமேடு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு குழுக்கள், மாநில மீன்வளத் துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

unsung heroes
சென்னை வெள்ளம், மெய்யூர், பனையூர், காசிமேடு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு குழுக்கள் மாநில மீன்வளத் துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

சென்னையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பெரும்பாக்கத்தில், மீட்புப் பணிகளில் ஏராளமான மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பகுதியில், “எடு எடு, அங்க நிக்கறாங்க” என்று தொடர்ந்து குரல் ஒலித்தது.

அது போன்ற குழு ஒன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சதுரங்கப்பட்டினத்திலிருந்து வந்தது. அப்பகுதியில் இருந்து வந்த 16 பேரில் ஒருவரான பி. மனோஜ் குமார், 32, அவர்கள் களமிறங்கிய விதம் பற்றி பேசினார்.

“திங்கட்கிழமை முதல் முடிச்சூரில் மீட்புப் பணியை மேற்கொண்டோம். அங்கே சவால்கள் இருந்தன. நாங்கள் ஆழமாகச் சென்றபோது, ​​மக்கள் தங்கள் குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் இரண்டு முதல் மூன்று நாட்கள் பால் அல்லது உணவு இல்லாமல் சிக்கித் தவிப்பதைக் கண்டோம்” என்று மனோஜ் குமார் கூறினார்.

“எங்கள் பணத்தில் இருந்து, குழந்தைகளுக்கான மருந்து போன்ற சில பொருட்களை வாங்கினோம். நாங்கள் அவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்றோம், ஆனால், நாங்கள் செலவழித்த அனைத்திற்கும் அது கிடைத்ததா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் கணக்கிடவில்லை. சில இடங்களில் 6 அடி வரை தண்ணீர் இருந்தது. இரண்டு நாட்கள் பணியை மேற்கொண்டபின், பெரும்பாக்கத்தில் பணிகளை மேற்கொள்ள, இங்கு வரவழைக்கப்பட்டோம்” என்று கூறினார்.

பெரிய லாரிகள் மற்றும் படகுகளில் மீட்கப்பட்ட மக்களால் பெரும்பாக்கத்தில் புதன்கிழமை பதற்றமான சூழல் நிலவியது. சிலர் தங்கள் கைகளில் எதையாவது எடுத்துக்கொண்டு பிரதான சாலையை அடைவதற்கு தண்ணீரில் அலைந்தனர்.

சவால்கள்

மூன்று இயந்திரப் படகுகள் மற்றும் மோட்டார் அல்லாத இரண்டு படகுகளுடன் சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

unsung heroes 3

சென்னை வெள்ளம்: பெரிய லாரிகள் மற்றும் படகுகளில் மீட்கப்பட்ட மக்களால் பெரும்பாக்கத்தில் புதன்கிழமை பதற்றமான சூழல் நிலவியது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்குத் மீட்புப் பணி தொடங்கி மாலை 5 மணிக்கு நிறுத்தப்படும் என்று அணியின் மூத்த உறுப்பினர் கே. செல்வமணி கூறினார். “பெரும்பாக்கத்தில் மட்டும் சுமார் 300 பேரைக் காப்பாற்றினோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாக்கத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்ட சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த மனோஜ் குமார், கூறுகையில், அவர்கள் 5 அடி வரை தேங்கியிருந்த தண்ணீருக்குள் செல்ல வேண்டியிருந்தது, அதே நேரத்தில், அவர்கள் மீட்புப் பணியை மேற்கொள்வதற்கு தடையாக இருந்த மெட்ரோ ரயில் தடுப்புகளை அகற்ற வேண்டியிருந்தது என்று கூறினார்.

மேலும், “முடிச்சூருக்கும் பெரும்பாக்கத்துக்கும் வித்தியாசம் இருந்தது. பெரும்பாக்கம் பகுதியில், பெரிய அப்பார்ட்மெண்ட்கள் மற்றும் கேட்கள் மூடப்பட்ட மக்கள் உள்ளனர். இங்கே மக்களை அடையாளம் காண்பது, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவது, அந்த இடங்களில் இருந்து அவர்களை மீட்பது வேறு சவாலாக இருந்தது” என்று அவர் கூறினார்.

உயிரைப் பணயம் வைத்து மீட்பு பணி

மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சில படகோட்டிகள் மக்களிடம் பணம் கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, மீட்புப் பணிகளில் ரத்தமும் வியர்வையும் சிந்தியதால் தாங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக மனோஜ் குமார் கூறினார்.

“நாங்கள் எங்கள் உயிரைப் பணயம் வைக்கிறோம். முடிச்சூரில் மீட்புப் பணியின் போது படகு திரும்பியதில் எங்கள் குழுவில் இருந்த ஒருவர் வயிற்றில் அடிபட்டு உயிர் இழந்திருப்பார். பலர் பயத்தில் படகில் ஏறியதால், படகில் இருந்து இறங்கியபோது, அதிக சுமை காரணமாக அவர்களைத் தள்ளியபோது, இருவருக்கு காலில் ஆணி குத்தி காயம் ஏற்பட்டது” என்று கூறினார்.

unsung heroes 4

மீனவர்கள் மீட்பதற்குக் பணம் வசூலிப்பதாக மக்கள் குற்றம் சாட்டினாலும், பெரும்பாக்கத்தில் படகு ஓட்டிகளுக்கு நன்றி தெரிவித்து, காப்பாற்றியதற்கு கைகூப்பி ‘நன்றி அண்ணா’ என்று அப்பகுதிவாசிகள் கூறிய காட்சிகள் மறையாது (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

“முடிந்தவரை பலரை மீட்கும் பணியை நாங்கள் மேற்கொண்டிருந்ததால் அந்த சவால்களை நாங்கள் சமாளித்தோம். நான் என் இதயத்தைத் தொட்டுச் சொல்ல முடியும், நானோ அல்லது எங்கள் குழு உறுப்பினர்களோ தங்கள் உயிரைக் காப்பாற்ற மக்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை” என்று அவர் கூறினார்.

மீட்புப் பணிகளுக்காக மீனவர்கள் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பெரும்பாக்கத்தில் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றியதற்காக படகு ஓட்டிகளுக்குக் கைகூப்பி நன்றி தெரிவிப்பதைக் காண முடிந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

chennai flood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment