கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று காலை தனி விமானம் மூலம் கோவை வந்தார்.
இரு சக்கர வாகன பேரணி
யோகி ஆதித்யநாத்தின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லீம் அமைப்புகள் டவுன் ஹால் பகுதியில் போரட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து, கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி, சங்கமேஸ்வரர் கோவில் வீதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன. பதற்றமான நிலை ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்து பலரும் வெளியேறினர். இதனால் அப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
இதற்கிடையில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இருசக்கர வாகன பேரணியை யோகி ஆதித்யநாத் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பாஜகவினர் இருசக்கர பேரணியாக டவுன் ஹால் பகுதிக்கு வந்தனர். பேரணியில் வந்தவர்களில் சிலர் அப்பகுதியில் திறந்து இருந்த ஒருசில கடைகளை மூடுமாறு கோஷமிட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திறந்த கடைகள் மீது கற்கள் வீசப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
அங்கிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். கடைகள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தந்தை பெரியார் திராவிட கழகம், எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் பாஜக நடத்திய இருசக்கர வாகன பேரணி அனுமதி வாங்கவில்லை எனவும், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர். எனவே பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழகத்தில் வெற்றி பெறுவோம்.
தமிழகம் பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம் அளிக்கும் மண். திமுக- காங்கிரஸ் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பில் அவர்களுக்கு கவலை கிடையாது. காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், 2ஜி ஊழல் என்று எண்ணற்ற ஊழல்களை செய்த கூட்டணி அது.
தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக அளவு நிதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 54 லட்சம் கழிப்பறைகளை இலவசமாக கட்டிகொடுத்துள்ளாம். விவசாயிகள் முன்னேற்றத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6000ஐ அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை கொண்டுவந்துள்ளோம் என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil