சென்னையில் உள்ள கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காரணத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வாக வண்டலூர் கிளாம்பாக்கத்தில் புது பேருந்து நிலையம் கட்ட திட்டமிட்டிருந்தனர். அதற்கான பணிகள் நிறைவுக்கு வரும் நிலையில் உள்ளது.
இதன் மூலமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லவதற்கும், சென்னையை நோக்கி வரும் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலேயே நிறுத்துவதற்கும், 45 ஏக்கரில் பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
தற்போது எஞ்சியிருக்கும் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து, விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு இந்த பேருந்து முனையம் கொண்டு வரப்பட உள்ளது.
தமிழகத்தில் எந்தெந்த ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்குவது, சென்னையின் சில பகுதிகளை இணைக்க மாநகர இணைப்பு பேருந்துகளை எவ்வாறு இயக்குவது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கிளாம்பாக்கம் புது பேருந்து நிலையம் பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிய உள்ள நிலையில், மாநகர இணைப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனையை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நடத்தி வருகிறது.
இதற்கான, பணிமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, இங்கிருந்து சென்னையில் பெரும்பாலான பகுதிகளை இணைக்கும் வகையில் 350 இணைப்பு மாநகர பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான, வழித்தடங்களை தேர்வு செய்து பட்டியலை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது. பிராட்வே, கோவளம், எண்ணூர், திருவெற்றியூர், பூந்தமல்லி, கோயம்பேடு, செங்குன்றம், அடையார், வேளச்சேரி, மாமல்லபுரம், மெரினா கடற்கரை, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் வழித்தடங்களை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பயணியரின் தேவை அதிகரிக்கும் பொது, மாநகர பேருந்துகளை கிளம்பாக்கம் பேருந்து முனையத்தில் அதிகரிப்போம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.