கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை இந்த வழக்கை கடுமையாக்கியுள்ளது.
உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வழக்கை, தமிழக காவல் துறை சந்தேக மரணம் என்ற பிரிவில் இருந்து கவனக்குறைவு (IPC 304 A) என்ற பிரிவிற்கு மாற்றி கடுமையாக்கியுள்ளது.

சட்ட வல்லுநர்களின் முறையான ஆலோசனையுடன் பிரியாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியா (17), சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான பிரியா, பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டதால், கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்தவமனையில் நவம்பர் 7-ம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை பெற்றார்.
கால் வலி, வீக்கம் ஏற்படும் காரணத்தால் எழும்பூரில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் போது, காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பதால் பிரியாவின் வலது காலை டாக்டர்கள் அகற்றினர்.
சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 15ஆம் தேதி பிரியா உயிரிழந்தார். இதையடுத்து, கவனக்குறைவினால் செயல்பட்டதாக மருத்துவர்கள் கே.சோமசுந்தர், ஏ.பல்ராம் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்வதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
பிரியாவின் தந்தை ரவிக்குமார், ‘‘அறுவை சிகிச்சையின்போது பிரியாவின் காலை முறையாக அகற்றாததால், ரத்தம் அதிகமாக வெளியேறியுள்ளது. ஆகையால் மூட்டுப் பகுதியை இறுக்கி கட்டியுள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும்’’ என்றார்.
மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தற்போது வழக்குப் பிரிவை சந்தேக மரணம் என்ற பிரிவில் இருந்து கவனக்குறைவு என்ற பிரிவிற்கு மாற்றியுள்ளது காவல்துறை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil