Advertisment

திருச்சி காங்கிரஸில் சலசலப்பு: எம்.பி திருநாவுக்கரசருக்கு எதிராக போர்க்கொடி

திருச்சி காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு பதவி பறிக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy Congress

திருச்சி காங்கிரஸில் சலசலப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு பதவி பறிக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:

Advertisment

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரசில் 65 வார்டுகள் அடங்கிய 8 கோட்டமாக உள்ளது. ஒவ்வொரு கோட்டத்திலும் 7 முதல் 12 வார்டுகள் உள்ளது. கட்சிப்பணியினை தீவிரப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் 17 கோட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. 

இதற்கான அறிவிப்பு கூட்டம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய  அமைச்சருமான  சு.திருநாவுக்கரசர் பரிந்துரையின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலோடு திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு கூட்டம் மாநகர மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ்  தலைமையில் சமீபத்தில் நடைபெற்றதாகவும். 

இதில் திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்களாக 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதாகவும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். ரெக்ஸ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன்படி ஸ்ரீரங்கம் 1,2,3,4 வார்டுகளுக்கு ஜெ.ஜெயம் கோபியும், திருவானைக்காவல் 5,6,7 வார்டுகளுக்கு ஆர்.தர்மேஷ் அகிலும், மலைக்கோட்டை 12,13,14,15  வார்டுகளுக்கு ஜே.வெங்கடேஷ் காந்தியும், மார்க்கெட் 19,20,21 வார்டுகளுக்கு எஸ். சம்சுதீனும், தாராநல்லூர் 16,17,18 ஆகிய வார்டுகளுக்கு ஆர். ஜி. முரளியும், வரகனேரி 30,31,32 வார்டுகளுக்கு  இஸ்மாயிலும், பாலக்கரை 33,34,49,50 வார்டுகளுக்கு ஜே.ஜே. வின்சென்ட்டும், சுப்பிரமணியபுரம் 46,47,59,61 ஆகிய வார்டுகளுக்கு எஸ். எஸ் .எட்வின்ராஜூம், ஏர்போர்ட்  60,63,64,65 ஆகிய வார்டுகளுக்கு கே. கனகராஜூம், அரியமங்கலம் 35,36,37,38 ஆகிய வார்டுகளுக்கு டி.அழகரும், காட்டூர் 39,40,41,42,43 ஆகிய வார்டுகளுக்கு ஏ.ராஜா டேனியல் ராயும், பொன்மலை 44,45,48 ஆகிய வார்டுகளுக்கு ஜி.பாலச்சுந்தரும், உறையூர் 8,9,10,11 ஆகிய வார்டுகளுக்கு கே. பாக்கியராஜூம், புத்தூர் 24,25,26 ஆகிய வார்டுகளுக்கு பி.மலர் வெங்கடேசும், தில்லை நகர் 22,23,27,28 ஆகிய வார்டுகளுக்கு ஆர்.கிருஷ்ணாவும், ஜங்சன் 29,51,52,53,54 ஆகிய வார்டுகளுக்கு வி. பிரியங்கா பட்டேலும், பஞ்சப்பூர் 55,56,57,58,62 ஆகிய வார்டுகளுக்கு எ.மணிவேலும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள அனைவரும் எம்.பி திருநாவுக்கரசரின் பரிந்துரை என கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவரின் இந்த அறிவிப்பில் நீண்ட நெடிய காங்கிரஸ் தொண்டர்களான அனைத்து தரப்பு மக்களிடமும் யதார்த்தமாக பழகும் இயல்புடையவரான ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவரான சிவாஜி சண்முகம், பாலக்கரை கோட்டத் தலைவரான அப்பகுதியின் மெஜாரிட்டி சமூக்கத்தை சேர்ந்த பொதுஜன பலம் உள்ள முன்னாள் கவுன்சிலரான இனிகோ ஜெரால்டு, மேலச்சிந்தாமணி பகுதியில் மக்கள் செல்வாக்குள்ள மலைக்கோட்டை கோட்டத் தலைவரான ஏ.ரவி நாடார், உறையூர் கோட்டத் தலைவரான பிரேம், பொன்மலை கோட்டத் தலைவரான செல்வகுமார் ஆகிய ஐந்து கோட்டத் தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

இது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது.

இந்த நிலையில் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் நீக்கப்பட்ட ஐந்து கோட்டத் தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். எம்.பி திருநாவுக்கரசர் மற்றும் மாவட்ட தலைவர் ரெக்ஸூக்கு எதிரான கண்டனங்களை எழுப்பினர்.

பின்னர், இது குறித்து காங்கிரஸ் நிர்வாகி சிவாஜி சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்;

இந்த அறிவிப்பு என்பது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் எடுத்த தன்னிச்சையான முடிவு. எங்களை இந்த அறிவிப்பு கட்டுப்படுத்தாது. காங்கிரஸ் பேரியக்கத்தை பொறுத்தவரை நாங்கள் நியமிக்கப்பட்ட கோட்டத் தலைவர்கள் அல்ல. காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள். 

நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் காலம்தான் ஆகிறது. எங்களது பதவி காலம் என்பது மூன்று வருடம். இன்னும் இரண்டு வருட காலம் பதவி இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளான எங்களை மாவட்டத் தலைவர் ரெக்ஸ் எப்படி மாற்ற முடியும்.

இது அவரது தன்னிச்சையான முடிவு. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும்,  ராகுல் காந்திக்கும், மாநில தலைவருக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். எம்.பி திருநாவுக்கரசரின் கைக்கூலியான ரெக்ஸின் இந்த அறிவிப்பை ஏற்க மாட்டோம் என்று தெரிவித்ததோடு, எம் பி திருநாவுக்கரசருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment