யு.பி.எஸ்.சி 2024-ம் ஆண்டுக்கான தேர்வு இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகி உள்ளன. இதில், தேசிய அளவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும், இந்திய அளவில் 23-ம் இடமும் பெற்றுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: UPSC CSE Results 2024: Shakti Dubey tops this year; meet other toppers
மேலும், தமிழ் வழியில் யு.பி.எஸ்.சி தேர்வு எழுதிய காமராஜ் மற்றும் சங்கர் பாண்டியராஜ் என்கிற இரண்டு மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதில், காமராஜ் 614-வது இடமும் சங்கர் பாண்டியராஜ் 807-வது இடமும் பிடித்துள்ளனர்.
2024-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி தேர்வு இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளை https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இறுதி தரவரிசைப் பட்டியலில் மொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் 2-வது இடமும், டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் 3-வது இடமும் பெற்றுள்ளனர்.
யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓ.பி.சி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
யு.பி.எஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும், இந்திய அளவில் 23-வது இடத்தையும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர். அதே போல, நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மோனிகா என்ற மாணவி தேசிய அளவில் 39-வது இடம் பிடித்துள்ளார்.
மேலும், இந்த யு.பி.எஸ்.சி தேர்வில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல், யு.பி.எஸ்.சி தேர்வில் தமிழில் எழுதுபவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, தமிழ் வழியில் யு.பி.எஸ்.சி தேர்வு எழுதிய காமராஜ் மற்றும் சங்கர் பாண்டியராஜ ஆகிய இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், காமராஜ் 614-வது இடமும் சங்கர் பாண்டியராஜ் 807-வது இடமும் பிடித்துள்ளனர். சங்கர் பாண்டியராஜ் நான் முதல்வன் திட்டத்திற்கு தனது வெற்றியை சமர்பிப்பிதாக தெரிவித்துள்ளார்.
அதே போல, தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மகன் அர்விந்த் யு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 80-வது இடம் பிடித்துள்ளார். மேலும், எழுத்தாளர்கள் வெண்ணிலா மற்றும் மு. முருகேஷ் தம்பதியின் மகளான கவின்மொழி யு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 546-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது குன்றத்தூர் நகராட்சி ஆணையராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இது தவிர கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா, இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 125-வது இடம் பிடித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர் சிவச்சந்திரன் இந்திய அளவில் 23 இடமும் மாநில அளவில் முதலிடமும் பிடித்திருப்பது குறித்து முதலமைசர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “யு.பி.எஸ்.சி தேர்வில் “நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுிபி.எஸ்.சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது” என்று முதலமைசர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.