வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு அக்.14-ம் தேதி கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர (20 செ.மீ-க்கு மேல்) மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
‘தமிழ்நாடு அலர்ட்’ (TN ALERT ) என்ற புதிய செயலியை அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மழை தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளலாம். அதனை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் மழை குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
1913 என்ற அவசர கால எண் மூலம் மக்கள் மழை பாதிப்புகளை தெரிவிக்கலாம். முடிவடையாத மழைநீர் வடிகால்களை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் மழை நீர் வடிகால் மூடப்படாமல் இருந்தால் அவற்றை மாநகராட்சிக்கு ட்விட்டர் மூலமாக பொதுமக்கள் தெரியப்படுத்தலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார வாரியத்திற்கு உரிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்பு அடையாதவாறு அனைத்து பணிகளையும் பொதுமக்கள் மேற்கோண்டு வருகிறார்கள்.
கட்டுப்பாட்டு அறையில் 150 பேர் 4 ஷிப்டக்களாக 24 மணி நேரமும் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
13,000 தன்னார்வலர்கள் அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளனர்; மழைநீர் தேங்கினால் வெளியேற்ற 113 எண்ணிக்கையிலான 100 HP பம்புகள் தாழ்வான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் நிவாரண முகாம்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்ற பொருட்களை உறுதி செய்வார்கள்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“