கைதான அமைச்சரை முதலமைச்சர் சந்திப்பது சட்டப்படி குற்றம் என பாஜக மாநிலத் துணை தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்காத்துறையால் ஜூன் 13ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து கழத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தார் என்ற வழக்கின் அடிப்படையில் அவரை அமக்காத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு மூன்று முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ஓமந்தூர் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி கைதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என்றும் அவர் கைது செய்யப்படுவார் என்பது முன்பே தெரிந்த ஒன்றுதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை, போளூர் பகுதியில் பாஜக கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி பேசியதாவது: “ ஒரு அமைச்சர் கைதாகி விட்டால் அவரை முதல்வர் சந்திப்பது சட்டப்படி குற்றம். இந்த இறைவன் இருக்கிறாரே ஒரே ஊரில் இரண்டு படைப்புகளை மாறிப் படைக்கிறார். ஊழலை ஒழித்தே தீருவேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை ஒழித்தே தீருவேன் என்று சொல்பவர்கள் கரூர் காரர்கள். திமுகவில் இணைந்து 33 வழக்குகளில் இருந்து தப்பித்து நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறுகிறார். நெஞ்சு வலிப்பவர்களால் பேசவே முடியாது. நான் இந்த பொதுக்கூட்டத்தில் சொல்கிறேன். செந்தில் பாலாஜி விரைவில் அப்ரூவராக மாறுவார். அந்த குடும்பத்தை காட்டி கொடுப்பார். ” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“