'பாராளுமன்ற புலி வைகோவுக்கு தி.மு.க கூட்டணியில் மாநிலங்களவைக்கு சீட் ஓதுக்காதது வேதனை'-துரை வைகோ

பாராளுமன்றத்தில் புலி வைகோவுக்கு திமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட் ஒதுக்காதது வேதனையாக உள்ளதாக திருச்சியில் துரை வைகோ கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் புலி வைகோவுக்கு திமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட் ஒதுக்காதது வேதனையாக உள்ளதாக திருச்சியில் துரை வைகோ கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
துரை வைகோ

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முதன்மைச் செயலாளருமான துரை.வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தலைவர் வைகோ 1978 ஆம் ஆண்டு அவர் 34 ஆம் வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.

Advertisment

30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பணியாற்றினார். நதி நீர் இணைப்பு குறித்து யாரும் சிந்திக்காத காலங்களில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்தவர் வைகோ,மே 1 ஊதியத்துடன் விடுமுறை, என்.எல்.சி தனியார் மயமாக்கலை தடுத்தது, ரயில்களில் டி.டி.ஆருக்கு படுக்கை வசதி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க குரல் கொடுத்தது, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தது என பலவற்றில் பங்காற்றியவர் வைகோ.

1978 ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்திற்கு சென்றபோது ஹிந்தி திணிப்புக்கு எதிராக பேசினார். தற்போது தன்னுடைய 81 வது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியும் நேரத்திலும் கூட மும்மொழி கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராக பேசினார். மூன்று முறை ஒன்றிய அமைச்சர் பதவி தேடி வந்த போதும் அதை மறுத்தவர் வைகோ.

அந்த தலைவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. பொன் குடம் உடைந்தாலும் அது பொன் குடம் தான். பாராளுமன்ற புலி வைகோ தான். வைகோவிற்கு பதவி ஒரு பொருட்டல்ல, மக்கள் பணி எப்போதும் தொடரும். நாங்கள் கடந்த ஆண்டு தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம்.

Advertisment
Advertisements

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என திமுக தலைமை தெரிவித்தார்கள். மாநிலங்களவை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் உள்ளது. தமிழ்நாட்டு நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம், கூட்டணியில் தொடருவோம். தமிழ்நாட்டின் நலனுக்காக கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம்.

சட்டமன்ற தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்து அவரும் கட்சி தலைமையும் தான் முடிவெடுப்பார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் அது போன்ற நடவடிக்கைகள் தேவையில்லாதது.

ஜீன் 22 மதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதில் விவாதிக்க உள்ளோம். தமிழ் மொழி தான் முதல் மொழி என்பதை மொழியியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

இது குறித்து கமல் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. தற்போது அந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு இருக்காது என நம்புகிறேன். ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே உள்ள பிரச்சனை அவர்கள் கட்சி சார்ந்தது அதில் நான் கருத்து கூறுவது ஆரோக்கியமானதாக இருக்காது.

நான் கருத்து கூறுவது நாகரீகமற்றது. பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் தமிழ்நாடு என கூறும் நயினார் நாகேந்திரன் மற்ற மாநிலங்களுக்கு சென்று பார்க்கட்டும் அங்கு நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தான் அதிகம்.

இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மதிமுக நிர்வாகிகள் மருத்துவர் ரெக்கையா, மாவட்டசெயலாளர்கள் வெள்ளமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட மதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

க.சண்முகவடிவேல்

Durai Vaiko

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: