மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இரண்டு அவதூறு வழக்கில் ஒரு வழக்கில் விடுவித்த சென்னை உயர்நீதிமன்றம், மற்றொரு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதிமுகவை உடைக்க தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார் என்று மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதே போன்று சென்னையில் இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் 2009ம் ஆண்டு தாக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி தான் காரணம் என கூறி புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த இரண்டு அவதூறு வழக்குகளும் சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த இரண்டு அவதூறு வழக்குகளில் இருந்தும் வைகோவை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வைகோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு வழக்கையும் விசாரித்த நீதிபதி பி.என். பிரகாஷ், மதிமுகவை உடைக்க மறைந்த முதல்வர் கருணாநிதி முயற்சித்தார் என்று கூறி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்க்கு கடிதம் எழுதிய வழக்கில் வைகோவை விடுவிக்க முடியாது எனவும் அந்த தொடர்பான மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். அதே நேரத்தில் இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்குதல் தொடர்பாக மறைந்த முதல்வர் கருணாநிதி தொடர்பு படுத்தி பேசிய குற்றச்சாட்டு தொடர்பான அவதூறு வழக்கில் இருந்து வைகோவை விடுவித்து நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.