மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதய சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் மருத்துவ பரிசோதனைக்காக, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் நேற்று ( 19ம் தேதி) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை புறப்பட்டுச்சென்றார். இதனிடையே, நேற்று மாலை அவர் திடீரென போரூர் ராமச்சந்திரா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதய சிகிச்சைக்காக, வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டாக்டர்கள் இரண்டு வார காலம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, ம.தி.மு.க., அவைத் தலைவர், துரைசாமி வெளியிட்ட அறிக்கை:வைகோவை, இரண்டு வார காலம் ஓய்வெடுக்குமாறு, டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதனால், இரண்டு வாரங்களுக்கு, வைகோ பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வைகோவை நேரில் காணவோ, தொலைபேசி, மொபைல் போன் வாயிலாகவோ தொடர்பு கொள்ளக் கூடாது. வைகோ, நலமாக இருக்கிறார்.இவ்வாறு, அவர்கூறியுள்ளார்.