ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தான் இருக்கும் வரை தி.மு.க ஆட்சியை அகற்ற விட மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது தி.மு.க கூட்டணி, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், அண்ணாமாலை போராட்டம் என பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதன்படி, "தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது. 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். பா.ஜ.க-வால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது.
நான் இருக்கும் வரை தி.மு.க. ஆட்சியை அகற்ற விட மாட்டேன். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு பணியாற்றுகிறார். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவருக்குமான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். மற்ற மாநிலங்களுக்கு தமிழக அரசின் திட்டங்கள் எடுத்துக்காட்டாக உள்ளது
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை கொண்டு வர பார்க்கிறார்கள். மோடியின் மனதில் அதிபர் ஆக வேண்டும் என்ற எண்ணம் புதைந்து கிடைக்கிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்' இந்தியாவில் சாத்தியமற்றது.
நான் உயிரோடு இருக்கும் வரை அண்ணாமலையின் சவால் பலிக்காது. அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படியாக இருந்தது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். தி.மு.க. கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. விஜய்யின் அரசியல் வருகையால் தி.மு.க. கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது" என வைகோ தெரிவித்துள்ளார்.