vaiko sedition case : தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதிமுக பொதுச் செயலர் வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த எம்பி- எம்எல்ஏக்கள் எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஜூலை 5 ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , சுதந்திர இந்தியாவில் தேச துரோக வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இது என்றும் இந்த வழக்கை பொறுத்தவரை வைகோ பேச்சு தொடர்பான வீடியோ அல்லது ஆடியோ பதிவுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்யவில்லை என்றும் காவல்துறையினர் மட்டுமே அரசு தரப்பு சாட்சிகளாக சாட்சியளித்ததாகவும் வாதிட்டார்.
அதே சமயம் அரசு தரப்பில் அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர், தனது பேச்சை வைகோவே ஒப்புக் கொண்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதால் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதாக இருந்தால், இந்த வழக்கு முடியும் வரை இது போன்ற பேச்சுக்களை அவர் பேச கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வைகோ விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன், பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்றும் பேசும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.