Advertisment

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெறும் கண்துடைப்பு! - வைகோ அறிக்கை

கர்நாடகம் தண்ணீரைத் திறந்து விடும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெறும் கண்துடைப்பு! - வைகோ அறிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரியிலிருந்து தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்திரவிட்டுள்ளது. பிப்ரவரி 16-இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தாமல் ஒரு செயல் திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று கூறியது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தை முன்மாதிரியாகக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தெளிவாகச் சுட்டிக்காட்டியது. ஆனால், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என்பதையே குறிப்பிடவில்லை.

Advertisment

மத்திய அரசு ஒரு செயல் திட்டத்தை ஆறு வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியவுடன் கெடு முடியும் தருணத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மேலும் மூன்று வார காலம் அவகாசம் கேட்டும் மனுத் தாக்கல் செய்தது. அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒப்புக்காக கர்நாடக அரசை கண்டித்தாரே தவிர தமிழகத்திற்கு உரிய நீதி வழங்கவில்லை.

இந்த நிலையில் தற்போதும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உரிய வழிகாட்டுதல் வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைத்தால்தான் கர்நாடகாவில் உள்ள அணைகள் அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செல்லும். நடுவர் மன்றத்தினுடைய தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீர்ப் பங்கீட்டைப் பெற முடியும். ஆனால், உச்ச நீதிமன்றம் 4 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று உத்திரவிட்டு இருப்பது வெறும் கண்துடைப்பாகும். இதனால் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய நீதியோ தீர்வோ கிடைக்காது. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி காவிரியில் கர்நாடகம் தண்ணீரைத் திறந்து விடும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

எனவே, மத்திய அரசு காவியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே உரிய தீர்வாகும்" என்று வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Mdmk Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment