காலமெல்லாம் இந்தியை எதிர்த்த கலைஞர் நாணயத்தில் இந்தி எதற்கு என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு கவிஞர் வைரமுத்து சமாதானம் கூறும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறர்.
இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தில் இந்தி மொழி இடம்பெற்றிருப்பது குறித்து, காலமெல்லாம் இந்தியை எதிர்த்த கலைஞர் நாணயத்தில் இந்தி எதற்கு என்று தி.மு.க ஆதரவாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி மத்திய பா.ஜ.க அரசை விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தில் இந்தி எதற்கு என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு சமாதானம் கூறும் விதமாக கவிஞர் வைரமுத்து பதிவு வெளியிட்டுள்ளார்.
கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீடு குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
“கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது. அதை வரவேற்போம்; வாழ்த்துவோம். காலமெல்லாம் இந்தியை எதிர்த்த கலைஞர் நாணயத்தில் இந்தியா? என்று சில தோழர்கள் வினவுகிறார்கள் அவர்களுக்கு அன்போடு ஒருசொல். இந்தியப் பணத்தாளில் இந்தியோடு தமிழும் விளங்குவதால் அது சமன்செய்யப்படுகிறது ஏற்றுக்கொள்கிறோம்
கலைஞர் நாணயத்திலும் இந்தியோடு, 'தமிழ் வெல்லும்' என்ற கலைஞர் கையெழுத்தும் இடம் பிடித்திருப்பதால் இங்கும் அது சமன்செய்யப்பட்டுவிட்டது. வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு?. களிப்புறுவோம்; களங்கம் எதற்கு? நிலவை ரசிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“