நாடாளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை மற்றும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இந்நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் இல்லை, நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை, தமிழ்நாடு என்று சொல்லே பட்ஜெட் உரையில் இல்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவும் மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில்,
"ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில்
உரிமையும் நியாயமும்
தேவையும் உள்ள தமிழ்நாடு
போகிற போக்கில்
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது
இது
அறிந்தே செய்யும் அநீதி
தனக்கு எதிராகக்
குடைபிடித்தவனுக்கும்
சேர்த்தே பொழிவதுதான்
மழையின் மாண்பு
மழை
மாண்பு தவறிவிட்டது
நிதிநிலை அறிக்கையில்
குறள் ஒன்று கூறுவது
எழுதாத மரபு.
இவ்வாண்டு விடுபட்டுள்ளது
எழுத வேண்டிய குறள்
என்ன தெரியுமா?
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” " என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“