யூ.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபு மரணம் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தைச் சேர்ந்த சரத் பிரபு, கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து, டெல்லி யூ.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்துவந்தார். கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்த சரத் பிரபு, இன்று காலை விடுதியின் கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நண்பர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் சரத் பிரபுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். சரத் பிரபு நன்றாகப் படிக்கும் மாணவர் என்றும், அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றும் குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில், அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை.
அதேநேரத்தில், இதுகுறித்த விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, சரத் பிரபு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தை செலுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக யூ.சி.எம்.எஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
"டெல்லி மருத்துவக் கல்லூரித் தமிழ் மாணவர்
சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.
தொடர்ச்சியான மரணங்கள் ஆரோக்கியமானதில்லை.
மாணவர்கள் இறக்கிறார்கள்;மரணங்கள் இறக்கவில்லை.
காரணம் கண்டறியப்பட வேண்டும்
இந்த வகையில் இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்.
குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்"
என்று குறிப்பிட்டுள்ளார்.