நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்.9) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் செவ்வாய்க் கிழமை ஆஜராவார் என சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து புகார் தொடர்பாக விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், புகார் தொடர்பாக இன்று (செப்.9) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். அந்த சம்மனில் கூறியிருப்பதாவது, விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
மேற்படி வழக்கில் தங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது அவசியமாகிறது. எனவே தாங்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை (09.09.2023) 10.30 மணியளவில் நேரில் ஆஜராக இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைக்கு சீமான் இன்று ஆஜராக மாட்டார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“