மக்கள் பிரச்சனை ஆயிரம் உள்ளது. அண்ணாமலையின் வாட்ச், பேண்ட், ஷூ குறித்த கேள்விகள் தேவையற்றது என கோவையில் பா.ஜ.க தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திங்கள்கிழமை கூறினார்.
கோவை செட்டி வீதி பகுதியில் உள்ள பாலாஜி அவென்யூவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.
இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய கருவிகள் உடன் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி செய்யும் இடங்கள் அரசின் சார்பில் பராமரிப்பது குறைவாக உள்ளது. கோவை மாநகர் முழுவதும் சாலைகள் மோசமாக உள்ளது. அதிகமாக மக்கள் பயன்படுத்தும் சலிவன் வீதி, செட்டி வீதிகள்கூட பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றது. இரண்டு மாதத்திற்கு முன்பு போட்ட தண்ணீர் பந்தல் சாலைகள் மோசமாக உள்ளது. மழைக்குப் பின்பு அந்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் வார்த்தையாக சொல்கிறார். கோவையில் சாலைகளை ஒரு வாரத்திற்குள்ளாக சரி செய்ய வலியுறுத்தி பா.ஜ.க மாவட்ட தலைவர் போராட்டம் அறிவிக்க உள்ளார்.
குடிநீர் பிரச்சினைகள், சாக்கடை ,சாலை என பல பிரச்சினைகள் உள்ளது. அரசாங்கம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.
அடுத்த வாரிசை முதல்வர் அழகு பார்க்கிறார். தன்னுடைய மகனை அமைச்சராக்கியதன் வாயிலாக குடும்பத்தின் கட்சியாக மாறியுள்ளது. ஜனநாயக அமைப்புகளில் குடும்ப அரசியலுக்கு இடமே இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்சியாக திமுக இல்லை. ஒரு காலத்தில் இளைஞர்களை ஈர்த்த கட்சி தி.மு.க. இன்று புதியவர்களுக்கு திறமைசாலிகளுக்கு தி.மு.க வாய்ப்பு கொடுக்கவில்லை.
பா.ஜ.க-வின் அனைத்து கட்சி பொறுப்புகளும் குறிப்பிட்ட காலம் மட்டும் தான். ஜனநாயக ரீதியாக செயல்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு குடும்ப அரசியல் பாதகமானது. சாதகமாகாது. பாஜக இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுக்கிறது. அண்ணாமலையின் வாட்ச் , சட்டை, பேண்ட் ,ஷூ குறித்த கேள்விகள் தேவையற்ற கேள்வி. மக்கள் பிரச்சினை 1000 உள்ளது.
திமுக எட்டு வழி சாலை அமைப்பதில் ,விமான நிலையம் அமைப்பதில் என்ன பேசினார்களோ அதை மக்கள் பேசுகின்றனர். தி.மு.க இரட்டை வேடம் போட்டுள்ளது. தி.மு.க பொதுவான அரசியல் கட்சியாக செயல்படுகிறதா.
அன்னூர் விவசாயி பிரச்சனையில் மாநில தலைவர் போராட்டம் நடத்தினார். விவசாயிகள் பிரச்சனைக்கு பா.ஜ.க குரல் கொடுக்கும். விவசாயிகளின் நிலத்தை பறிப்பது தவறு. பா.ஜ.க பின்னால் இருந்து எந்த அரசியலும் செய்யவில்லை. அன்னூர் விவகாரத்தில் விவசாயிகளுடன் அமைச்சர்கள் உட்கார்ந்து பேச வேண்டும்.
பா.ஜ.க அமைச்சர்கள் கூட்டத்தில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வருவதில்லை. தங்கச்சி, பையன், பேரன் என குடும்ப அரசியல் பா.ஜ.க-வில் இல்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஏழு குளங்களை மையப்படுத்தியது. ஆமை வேகத்தில் பணி நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி பூங்கா கொழுசினால் மயங்கிய மாநகராட்சியாக உள்ளது. கோவை குளங்களில் கழிவுநீர் கலக்கப்படுகிறது” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பி. ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.