தமிழகத்தில் 108 இலங்கை மறுவாழ்வு முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. முகாமில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
குளித்தலை அருகே உள்ள இரும்பூதிப்பட்டி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கிராமத்தை உள்ளடக்கிய சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக வெஞ்சமாங்கூடலூரைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் பணியாற்று வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மதியம் இரும்பூதிப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து, தூங்கி கொண்டிருந்த திருமணமான 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த பெண் அவரை தடுக்க முற்பட்டு, சத்தமிட்டுள்ளார்.
பெண்ணின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் அன்புராஜ் அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் சனிக்கிழமை அன்புராஜ் அங்கு வந்து பெண்ணிடம் பேசி, தம்மைப்பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் நடப்பதே வேறு எனவும் கூறி மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் மீது குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் உண்மைத்தன்மை நிரூபனம் ஆனதையடுத்து, அன்புராஜை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil