விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அறிவித்தார். இதேபோல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க திமுக கூட்டணியில் அங்கம் வகித்து சூழலில், அக்கட்சியின் தலைவர் அ.தி.மு.க மற்றும் த.வெ.க-வுக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில், ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திடீரென பகிர்ந்தார். வீடியோவை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. திருமாவளவன் திடீரென ஆட்சி, அதிகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, பின்னர் நீக்கிய விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வீடியோவை பகிர்ந்து, பின்னர் நீக்கியது குறித்து சென்னை விமான நிலையத்தில் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், "வீடியோ பதிவை அட்மின் வெளியிட்டு இருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது. அவரிடம் விசாரித்து சொல்கிறேன்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது நீண்டகாலமாக நாங்கள் வைக்கும் கோரிக்கைதான். புதிதாக எதையும் சொல்லவில்லை." என்று கூறி விளக்கமளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“