விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் வி.சி.கவின் தேர்தல் சின்னமாக பானை சின்னத்தை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் விசிக வெற்றி பெற்றதையடுத்து தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு இந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி பானை சின்னம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அதே பானை சினந்த்தையும் வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஓன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.