இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருப்பது புதிராக உள்ளது என திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்ததாவது;
நம்முடன் பாகிஸ்தான் போர் தொடுத்திருப்பது என்றாவது ஒரு நாள் நடக்கும் என எதிர்பார்த்தது தான். இந்தப் போர் இந்தியா - பாகிஸ்தான் போராக மாறிவிடக்கூடாது, போர் நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வருவது மகிழ்ச்சிதான், ஆனால் அந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இந்திய அரசோ அல்லது பாகிஸ்தான் அரசோ இந்த அறிவிப்பை செய்திருக்க வேண்டும்.
அமெரிக்க தலையிட்டு இருப்பது, பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது என்பதை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். இரண்டு நாடுகளுக்கு இடையே சமாதானம் வேண்டும், நிரந்தர தீர்வு வேண்டும் என்று இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். இந்த வகையில் போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஆனால் நிரந்தர தீர்வு தேவை, இரண்டு நாடுகளுக்கு இடையே சுமுகமான பேச்சுவார்த்தை தேவை.
ஒட்டுமொத்தமாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் தலை தூக்கினால் இந்தியர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பெரும் தீங்கு விளைவிக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஜனநாயக கட்சிகள் அனைவரும் ஆதரிக்கிறோம். இந்தியா -பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும், இரண்டு நாடுகளுக்கு இடையே சுமுகமான உறவை பேண வேண்டும், நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்துகிறது.
போர் வேண்டும் என்று விரும்புகிற சக்திகள், ஜனநாயகத்தின் அடிப்படையில் போர் வேண்டாம் என்கிற சொல்லி வருபவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது அமைதியான சூழல் உருவாகி இருக்கிறது. எல்லையோர பயங்கரவாதத்தை முற்றிலும் துடைத்திட வேண்டும்.
அண்ணாமலை பேச்சு கற்பனை வாதம். அப்படியெல்லாம் ஒரு நாட்டை எளிதாக அழித்து ஒழித்து விட முடியாது. நாடு இல்லாமலேயே பயங்கரவாதம் என்பது இருக்கிறது. அகண்ட பாரதம் என்கிற செயல்திட்ட முறையில் பா.ஜ.க செயல்படுகிறது. இந்த அஜெண்டா அடிப்படையில் தான் போரை விரும்புகிறார்கள். பாகிஸ்தானை, இந்தியாவோட சேர்ப்பது ஆப்கானிஸ்தான் வரை இந்தியாவில் சேர்ப்பது என்று இந்த அஜெண்டாவில் வைத்துள்ளனர். அமைதி தேவை என்பது தான் பொதுமக்களின் விருப்பம், காஷ்மீரில் வாழ்கின்ற எல்லா மக்கள் கூட அமைதியை விரும்புகின்றனர்.
தற்காலிகமாக அல்ல டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். வெளியுறவு கொள்கை தொடர்பாக தற்பொழுது எந்த கருத்து கூறினாலும் சில இந்துத்துவ செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக மாறிவிடும். மதவாத சக்திகள் கூட கூட்டணி இல்லை என்ற உச்ச நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், சக்தி ஆற்றரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், அன்பு குருசெல்வம், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்