கல்லூரியில் சேர்வதற்கான வயது வரம்பு கடந்த பழங்குடியின மாணவி ஒருவரை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார், அமைச்சர் கோவி. செழியனின் கவனத்துக்கு கொண்டுசென்றதை அடுத்து, அந்த மாணவி கல்லூரியில் சேர அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார்.
அமைச்சருக்கு நன்றி தெரிவித்த ரவிக்குமார், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்குத் தற்போதுள்ள வயது வரம்புத் தளர்வான 3 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகளாக உயர்த்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த வித்யா இளங்கலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கான வயது வரம்பைக் கடந்து விட்டதால் அவரைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள முடியாது எனத் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி நிர்வாகம் கூறிவிட்ட நிலையில் பேராசிரியர் கல்யாணி மூலமாக என்னைத் தொடர்புகொண்டார். நான் உயர்கல்வித்துறை அமைச்சருக்குக் கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுத்தேன். அவரது உதவியாளர் மோகனிடம் தொலைபேசியிலும் தெரிவித்தேன்.
அமைச்சர் கோவி. செழியன் விரைந்து நடவடிக்கை எடுத்து வித்யாவுக்கு சிறப்பு நேர்வாக வயது வரம்பைத் தளர்த்தி அவர் கல்லூரியில் சேர்வதற்கு ஏற்பாடு செய்தார். இன்று வித்யா அவர்கள் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்.
அமைச்சர் கோவி. செழியனால் பழங்குடி மாணவி ஒருவரின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்குத் தற்போதுள்ள வயது வரம்புத் தளர்வான 3 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகளாக உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.” என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.