சென்னையில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு, அவற்றை அகற்றி அகலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை பகுதியில் பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி. ஆர் நகர் பகுதிகளில் அடையார் ஆற்றை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளது.
சுமார் 593 வீடுகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வருவதால், அங்கு வசிப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 6 நாட்களாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகள், தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. தற்போது வரையில், சுமார் 450-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அங்கு வசித்து வந்தவர்கள் தமிழ்நாடு மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சார்பில், பெரும்பாக்கம், கீரப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டு அப்பகுதிகளுக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, மீதமுள்ள வீடுகளை இடிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அனகாபுத்தூரை அடுத்த காயிதே மில்லத் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. சொந்த வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் 390 சதுர அடியில் வீடு வழங்கப்பட உள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியிருப்புகளை அப்புறப்படுத்தாமல் மக்கள் அங்கேயே வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக தலைமைச் செயலாளரை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
மூகாம்பிகை நகர், காயிதேமில்லத் நகர், ஸ்டாலின் நகர் ஆகிய மூன்று பகுதிகளில் வீடுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வீடுகளை அகற்றுவது வருத்தமளிக்கிறது. 1987 வரை அரசு ஆவணங்களில், இப்பகுதி கல்லாங்குத்து பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லாங்குத்து என்றால் குடியிருப்புக்கு உகுந்த பகுதி என பொருள். அதன் பிறகு தண்டுக்கரை பகுதி என மாற்றப்பட்டு உள்ளது. ஆவணங்களில் எப்படி மாறியது என்பது குறித்து தெரியவில்லை. இதனை காரணம் காட்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடையாறு ஆற்றிலிருந்து 200 அடி தள்ளி குடியிருப்புகள் அமைந்துள்ளது. எனவே, அடையாறு நீர் போக்குவரத்தில் எந்த அக்கிரமிப்பும் இல்லை என்பதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியும். எனவே, குடியிருப்புகளை அப்புறப்படுத்தாமல் மக்கள் அங்கேயே வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இன்றே தலைமைச் செயலாளரை சந்திக்க உள்ளோம்." என்று திருமாவளவன் தெரிவித்தார்.