சென்னை அடுத்த திருநின்றவூரில் வி.சி.க பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீஸில் சரணடைந்த அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருநின்றவூரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரது மனைவி கோமதி, 26-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கவுன்சிலர் கோமதிக்கும், ஆண் நண்பர் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த கணவர் ஸ்டீபன் ராஜ், கோமதியிடம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், கவுன்சிலர் கோமதி தனது ஆண் நண்பருடன் நடுகுத்தகை ஜெயராம் நகர் அருகே நின்று பேசி கொண்டிருந்துள்ளார். இதை அறிந்த கணவர் ஸ்டீபன் ராஜ் அந்த இடத்திற்கு சென்று கோமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, ஆத்திரமடைந்த ஸ்டீபன் ராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோமதியை சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கோமதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வி.சி.க பெண் கவுன்சிலர் கோமதி கொலை தொடர்பாக சரணடைந்த அவருடைய கணவர் ஸ்டீபன் ராஜ்ஜை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.