Veerapandi Arumugam Son land acquisition case : திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா உள்ளிட்ட 16 பேர் மீதான நில மோசடி வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. சேலம் அங்கம்மாள் காலனியில், நகை கடை அதிபர் பிரேம்நாத்த்துக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும், அந்நிலத்தை விற்க மறுத்ததால், அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததுடன், கொலை செய்ய முயன்றதாக, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில், சேலம் திமுக மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ஏ.ராஜா என்கிற ராஜேந்திரன், கவுசிக பூபதி லட்சுமணன், பாரப்பட்டி சுரேஷ், தெய்வலிங்கம், ராமு, சரவணன், அழகாபுரம் ஜான், பிரகாஷ், முரளி, நாராயணன், ஸ்ரீ ரங்கநாதன், பால குருமூர்த்தி ஆகிய 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக குற்றப்பத் திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு எம்.எல்.ஏ., எம்.பிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும், சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 14 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் எதிரி வீரபாண்டி ஆறுமுகம் தற்போது உயிருடன் இல்லை எனவும் அவர் மரணமடைந்துவிட்டார் எனவும், புகார்தாரர் மற்றும் அவரது சகோதரருடன் சமரசம் செய்து கொண்டோம். அதன் பேரில், தங்களுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது
இருதரப்பினருக்கும் இடையே, கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி சமரசம் செய்து. கொண்டதற்கான ஒப்பந்த்தம் செய்துள்ளோம். ஆகவே, தங்களுக்கு எதிரான, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலமோசடி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் புகார்தாரர் சமரசம் செய்து கொண்டதாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனையேற்று, வீரபாண்டி ஆ.ராஜா, பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில மோசடி வழக்கை ரத்து செய்கிறேன். மேலும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சென்னை திரிசூலத்தில் உள்ள மனசு ( மனநல சுகாலயம்) என்கிற மனநல காப்பகத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுத் தொகையை, 2 வாரத்தில் நன்கொடையாக வழங்க வேண்டும்.
இதை செலுத்தியதற்கான ரசீதை நீதிமன்ற பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், இந்த உத்தரவு தானாக ரத்தாகிவிடும் என்று நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : 1500 ரூபாய் உதவி தொகை திட்டம் : அதிமுக மீது நடவடிக்கை எடுக்கோரிய வழக்கு நாளை விசாரணை!